Monday, 9 November 2015

என் மழையானவள்...!


என் அங்கத்தின்
ஒவ்வொரு தடத்திலும்
ஒவ்வொரு துளியாய்
முத்தம் இடுகிறாள்.
தேகத்தில் பட்டுத்
தெறித்துதறி பாலாய்
வழிகிறாள்... நெளிகிறாள்...!

தலைமுடியை திரித்து
விளிம்பில் வந்து எட்டிப்பார்த்து
மூக்கு மேல் குதித்து
மீசையை வருடிவிட்டு
உதடுகளை தொடுவாளே...
அதில் உள்ளது
என் மீதான அவளது ரசனை!

அத்தோடா நிற்பாள்?...
புஜம் மீதே அவளது மோகம்.
பட்டென்று பட்டு
நடுநெஞ்சை அவளடையும்
உத்தியிருக்கே உத்தி...
காமப் பாலினுடைய
முரட்டுத் தனமது!

நானறியா பொழுதில்
அத்தனை செய்கிறாள்...
இத்தனை கொள்கிறாள்...
நானறிந்து நின்று
கட்டியணைக்கும்போது மட்டும்
காணாமல் போகிறாளே..!

என் 'ஆண் பாவம்' அவளை சும்மாவே விடாது...

-அருண்வினோ