அன்புக்குரிய நண்பர்களே,
இன்றுடன் ஊடகத் துறையில் எனது ஆயிரமாவது பணி நாளை நிறைவு செய்கிறேன். வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. எனது தொழிலை முதன் முதலாக மும்பையிலிருந்துதான் தொடங்கினேன். அங்கு பணியாற்றிய 365 நாட்களில், கிடைத்த அனுபவங்கள் சில நூறு இருந்தாலும், இப்பதிவில் அவற்றை பற்றி பதிவு செய்யவில்லை. மாறாக, தாராவி என்ற சிறு பகுதியில் வசிக்கும் தமிழர்கள், கலப்பினத்தவர் மற்றும் அவர்கள் கட்டமைத்த நாகரீகம் பற்றிய சில தகவல்களை பதிவு செய்துள்ளேன். ''என்னடா இது இவன் நாகரீகம் என்று எதையோ சொல்கிறானே'' என்கிறீர்களா? இக்கட்டுரையை படித்துப் பாருங்கள்......
உலகின் மிகப்பெரிய நகர்ப்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சி என்ற அந்தஸ்துடன் தலை நிமிர்ந்து நிற்கிறது மும்பை பெருநகரம். மராட்டிய மண்ணின் ஒட்டுமொத்த உயிரோட்டத்தின் பிடிப்புடன்,கொங்கன் கடற்கரையில் துடிப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது இந்த வர்த்தக நகரம்.
படோடபம், ஆர்ப்பாட்டம், அலம்பல், அட்டகாசம் என பந்தாவுக்கு என்னென்ன மறுபெயர்கள் இருக்கிறதோ அத்தனையும் மும்பைக்கு பொருந்தும். அதே நேரத்தில் நேர்த்தி, இயல்பு, சகிப்புத்தன்மை, நிதானம், உழைப்பு என அத்தனை நல்ல விடயங்களும் கூட பொருந்தும். 9 ஆயிரம் கோடிக்கு அம்பானி கட்டிய வீட்டையும், ஏழைகளின் சாலையோர அடுப்புகளையும், ராட்சத குழாய்க்குள் குடும்பம் நடத்தும் மனிதர்களையும் இங்கேதான் காண முடியும். பிரமாண்ட கட்டிட கோபுரங்களின் இடைவெளிகளுக்குள் இருந்து பார்க்கையில், தார் அட்டை போடப்பட்ட குடிசைளும் தன் அழகையும் அமைதியையும் போட்டிக்குப் போட்டியாக ஈடுகட்டிக்கொண்டிருக்கும். வீடுகளின் சுவர்களை ஒட்டியவாறே நகரின் முக்கிய சாக்கடை கால்வாய்கள் சத்தமின்றி ஓடி, அரபிக்கடலில் சங்கமித்துக்கொண்டிருக்கும். இணைப்பில் உள்ள செயற்கைக்கோள் படத்தை பார்த்தாலே உங்களுக்குப் புரிந்துவிடும். சிவப்பு நிற கோட்டிற்குள் இருக்கும் பகுதிதான் தாராவி. அங்குள்ள கட்டிட மேற்கூரைகளை பாருங்கள். சிவப்புக் கோட்டிற்கும் வெளிப்பக்கம் உள்ள கட்டிட மேற்கூரைகளை பாருங்கள்.
உலகின் மிகப்பெரிய நகர்ப்புற திரட்சி நகரம் மும்பை என்பதை போல, நகரின் இரத்த நரம்புகளை இழுத்துப்பிடித்த இதயமாக அமைந்திருக்கும் தாராவி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய குடிசைப்பகுதி என பட்டம் சூட்டப்பட்ட பகுதி ஆகும். கடற்கரையில் மாகிம். அதற்கடுத்ததாய் முழுக்க முழுக்க குடிசைகள் நிரம்பிய பகுதி தாராவி. அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
ஆதி காலத்து தாராவி ஒரு வித மயான சூழலை கொண்டிருந்த இடம். பின்னர் பம்பாய் தோல் தொழிற்சாலையின் வேலை வாய்ப்புகளுக்காக தமிழர்கள் இங்கு படையெடுத்துள்ளனர். நாலு கால் குச்சி நட்டு, அதில் சாக்கு கட்டிக்கொண்டு வாழ்ந்துள்ளனர் மக்கள். பம்பாயில் தொழிற்சாலைகள் ஒன்றன்பின் ஒன்றாக அசுரத்தனமாக முளைக்கத் தொடங்கியபோது. ஏராளமான தமிழர்களும் தெலுங்கர்களும் புலம்பெயர்ந்து வந்து குடியேறினர். தாராவி வடிவம் பெற தொடங்கியது. குடில் வீடுகள் சில ஆண்டுகளுக்கு பின்னர் தார் அட்டை போர்த்தப்பட்ட பாதுகாப்பான ‘ஒட்டு வீடு’களாக மாறின. நூறிலிருந்து ஆயிரம் வரையும், ஆயிரத்திலிருந்து பல்லாயிரம் வரையுமாக வீடுகளின் எண்ணிக்கை பெருகியது. இன்று அங்கு ஆறு இலட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
மக்கள் வளம் பெருக பெருக அரசியல்வாதிகள் நுழைந்தார்கள். தமிழர்களின் ஆளுமையால் அங்கு அரசியல் கொடிகட்டி பறக்கிறது. அப்பகுதியில் போட்டியிடும் ஒவ்வொரு மராட்டிய அரசியல்வாதிகளுக்கும் அங்குள்ள ஒவ்வொரு தமிழன், தமிழச்சியுடைய முக்கியத்துவமும் தேவைப்படுகிறது. வாக்கு பெறும்வரை. வீர சிவாஜியின் அரசியல் தத்துவங்களை கரைத்துக் குடித்துவிட்டு வந்து, மேடைகளில் பேசி அரங்கம் அதிரும் கைத்தட்டல்களையும், விசில்களையும் பரிசாக பெற்றுச்செல்கிறார்கள். தேர்தல் காலத்தில் பார்க்க வேண்டும், அந்த மேடை நாடகங்களை.
இருப்பதோ நான்கைந்து பேர்; தாயக்கட்டைகள் போல் உருண்டு உருண்டு அவர்களுள் ஒருவர் தாராவியை கைப்பற்றினாலும், அந்த அரசியல்வாதிகளால் உரிய நேரத்தில், உரிய இடத்தில் தாராவியும் அதன் பிள்ளைகளும் பேசப்படுவதில்லை.
எனது கண்ணோட்டத்தின் ஊடாகவும், சில அனுபவஸ்தர்களின் டீக்கடை விவாதங்களாலும் ஒன்றே ஒன்றை மட்டும் நன்கு தெரிந்துகொண்டேன்.
தாராவி என்பது அரசுக்களால் கட்டமைக்கப்பட்டு, வளர்த்தப்பட்ட இடம் அல்ல; முழுக்க முழுக்க மக்கள் சக்தியாலும், அவர்களின் உழைப்பாலும் கட்டமைக்கப்பட்ட இடம் . அப்பகுதியின் மக்கள் தொகை பெருகத் தொடங்கியபோது, அடைப்படை வாழ்வியலை பூர்த்தி செய்வதற்கான சில தொழில்கள் தொடங்கப்பட்டன. பலர் தொழிற்சாலை வேலைகளிலிருந்து விடுதலை அடைந்து, தங்களுடைய திறமைகளையும், உழைப்பையும் முதலீடாக போட்டு, சொந்த தொழில் தளங்களை நிறுவிக்கொண்டனர். அரசியல் தொடர்புகளின் மூலம் மின்சாரம் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகுதான் வளர்ச்சி தன் புரட்சியை பட்டி தொட்டியெங்கிற்கும் கொண்டு சேர்க்க ஆயத்தமானது. பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு வகையான சிறு, குறு, குடிசைத் தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டன. தாராவியின் பொருளாதாரம் அதன் குடிமக்களின் வீடுகளுக்குள் இருந்து தொடங்கியது. குடிசைத் தொழிலில் பிஸ்கட் தயாரிப்பு, மட்கலம், விளக்குகள், பானை, அப்பளம், வடகங்கள், கைவினைப் பொருட்கள், நொறுவல் தீனிகள், ஊறுகாய், மர வேலை, இனிப்பகம், உணவகம், பை தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, தோல் காலணிகள் தயாரிப்பு, நெய்தல் என தொழில்கள் முளைக்க முளைக்க, இப்பகுதியின் பொருளாதாரம் வீறிட்டு வளரத்தொடங்கியது. தொழிலில் லாபமடைந்தவர்களால் கல்விச் சாலைகள் தொடங்கப்பட்டன. மக்கள் தீவாக கிடந்த பகுதியை நகரின் முக்கிய பகுதிகளுடன் இணைத்து வைத்தன சாலைகள். வழித்தடங்கள் அமைந்தன. போக்குவரத்து அம்சங்களை பெற்றது தாராவி. அதனுடன் சயான் ரயில் நிலையம் அமையப்பெற்றதுதான் பொருளாதாரத் தூண்டலுக்கான அடுத்தக்கட்ட நகர்வாக அமைந்தது. படிப்படியான வளர்ச்சிக்கிடையே அரசியல்வாதிகளின் கண்களுக்கு தாராவி தங்கச் சுரங்கமாக மிளிர்ந்து கொண்டிருந்தது. பிரபல வங்கிகளின் கிளைகள் மாநிலம் விட்டு மாநிலம், ஊர் விட்டு ஊர் என படையெடுத்து வந்துள்ளன. மும்பை நகரின் பொருளாதார அரசியலுக்கான அடிப்படை பங்கீட்டை தாராவி வழங்கிக்கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது. ஆம், தாராவி இப்போது குடிசைத் தொழில்களின் முடிசூடா ராணி.
பொருளாதாரம் வளர்ந்தாலே நாகரீகம் தானாக வளரும் என்பது கோட்பாடு. தாராவியில் இன்று பொருளாதாரம் வளர்கிறது; நாகரீகமும் வளர்கிறது. பழைய ஒட்டு வீடுகள் மறைந்து ஆங்காங்கே தனியார் அப்பார்ட்மெண்ட்கள் எழுந்துள்ளன. ஆங்காங்கே கட்டமைப்பு வசதிகள் எழும்பத் தொடங்கியுள்ளன. அரசு கட்டிக்கொடுத்த குடியிருப்புக் கட்டிடங்கள் வெகு சொற்பம் என்றாலும், மக்கள் சக்தியால் எழுப்பப்படும் கட்டிடங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது மகிழ்ச்சியே. எனினும் சில பகுதிகளில் குடிநீர், மின்சாரம், கழிப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை விடயங்களில் நிறைவின்மை நிலவுகிறது. மக்கள் தமிழ் நாளேடுகளுக்கு வியர்க்க விறுவிறுக்க, குரல் நடுங்க புகார்களை இறைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அங்கு இரண்டே தமிழ் நாளேடுகள்தான்; தினகரனும், தினத்தந்தியும். பதினான்கு லட்ச குடியிருப்பு வாசிகளின் அபயக்குரலும், கோரிக்கைகளும், அவர்களுக்கான தகவல்களும் இந்த இரண்டு நாளேடுகள் வழியாகக் கேட்டால்தான் உண்டு. மராட்டிய ஏடுகளில் உள்ளூர் பக்கங்களின் ஏதோ ஒரு மூலையில் கொட்டியும் கொட்டப்படாமலும் கிடக்கும் அச்செய்திகள்.
அரசியல்வாதிகள் ஒன்றே ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். உங்களிடம் பொதுமக்கள் வானளாவிய கட்டிடங்களை கேட்பதில்லை. சராசரி வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மட்டும்தான் கோருகிறார்கள். அதை முழுதாக நிறைவேற்றுவதற்குள் உங்கள் வீடுகளுக்குள் பணம் புகுந்து விளையாடிவிடுகிறது. மாநில அரசாங்கம் விளாவரியாக கண் கொடுக்கும் வரை இந்த விளையாட்டுகள் ஓயப்போவதில்லை. அவை விரைவில் ஓய்க்கப்படவேண்டும். இருந்தாலும் மக்கள் தங்கள் வீட்டுப் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக தங்களுடைய தொழில்களை ஒயாமல் இயக்கிக்கொண்டிருக்கின்றனர்.
தாராவி பற்றி பேசினால், இன்னும் எவ்வளவோ பேசலாம், விவரிக்கலாம். சமுதாய கட்டமைப்புகள், அரசியல் அமைப்புகள், கல்விச் சூழல் என ஒவ்வொரு அங்கத்திலும் சுமார் நூறு நூறு பக்கங்கள் எழுதலாம். ஆனால் இந்த கட்டுரையை படிக்க உங்களுக்கு நேரம் வேண்டும் அல்லவா? ஆக, பின்னாளில் என் கபாலத்துக்குள் கிடக்கும் அறிவானது, புத்தகம் இயற்றும் அளவிற்கு பக்குவப்படும்போது, எனது எழுத்துக்களை தாராவிக்கென அர்ப்பணித்து ஒரு புத்தகம் இயற்றுவேன். ஏனென்றால் எனது தொழில் ரீதியான வளர்ச்சிக்கு முதல் அஸ்திவாரம் தாராவியிலிருந்து போடப்பட்டது ஆகும். அங்கிருந்துதான் எனது கருத்தோட்டங்களும், எழுத்தோட்டங்களும் துளிர்விட்டு ஓடத்தொடங்கின. அங்கேதான் எனது கண்ணோட்டம் சீரமைக்கப்பட்டது. எளிமையையும், உழைப்பையும் கற்றுக்கொண்ட இடம் அதுதான். கூண்டிலடைத்த கிளியாய் வீட்டுக்குள் முடங்கியிருந்த எனக்கு, சாமானியர்களுடனான உறவை ஏற்படுத்திக் கொடுத்து, முழு சுதந்திரத்தை உணரவைத்த பெருநகரின் சிறு அங்கம் அது. பேனாக்கள் மீண்டும் என் உள்ளங்கைக்குள் அரங்கேற்றப்பட்ட பீடமும் அதுவே. அங்கே என் எழுத்துக்களுக்கு முதன்முதலில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. தாராவியின் சாலைகளிலும், சந்துகளிலும் தார்மீக உறவுடன் சுற்றித்திரிந்த அந்த ஒரு வருட கால அனுபவத்தை மீண்டும் பெறுவதற்கு தயாராகவே இருக்கிறேன்.
தொழில் நிர்வாகவியல் படித்திருந்தாலும், பத்திரிக்கை துறையின்மீது கொண்டுள்ள ஆர்வத்தை புரிந்துகொண்டு, முதல் பணி வாய்ப்பினை வழங்கிய மும்பை தினகரன் நிர்வாகத்திற்கும், ஆசிரியர் அவர்களுக்கும், துணை ஆசிரியர்கள், பக்க கட்டமைப்பாளர்கள் மற்றும் என்னுடன் பணியாற்றிய செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது கடமையுணர்வு நிறைந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
ஆக்கம்: #அருண்வினோ
புகைப்படங்கள்: #Google




No comments:
Post a Comment