Tuesday, 5 July 2016

விரல்கள் கதறுகின்றன‬!


தலைநகரில் அன்று நடந்திருந்த ஐந்தாறு கொலைகளில், வெட்டவெளியில் நிகழ்ந்த மிக பயங்கரமானதொரு கொலைக்கு ஊடகங்கள் முரசறையும் சத்தம் கேட்டு, திடுக்கிட்டெழுந்து அடுப்படியிலிருந்து தெறித்தோடி வந்த பூனைக்குட்டியாய் ஃபேஸ்புக்கில் ஆஜர் ஆனான் தமிழன். சம்பவத்தின் செய்திகளையும், கட்டுரைகளையும், பெண்ணியத்தையும், உடன் தன்னிலை விளக்கத்தையும், விரல் நுனிகள் கதற கதற கணத்திற்குக் கணம் பதிவேற்றி பகிர்ந்து போராடிப் பார்த்திருக்கிறான். திரும்பும் பக்கமெங்கும் அவனது எழுத்துக்களிடும் ஓல சப்தங்களைக் கேட்டு சுவாதியின் ஆத்மாவும் கூட கத்திக் கதறியிருக்கலாம் என ஊகிக்கிறேன். கொலையாளன் கைது செய்யப்பட்ட பின்புதானே இவனது வேகதாபம் சற்று குறைந்துள்ளது!
இறுதியில்... சீரழிந்து கிடக்கும் இந்த நோஞ்சான் சமூகத்தின் மீதான தன் வெறுப்புணர்வை உமிழ்வதை உணர்த்தும் வகையில் 'அடுத்த சுவாதிக்காக காத்திருக்கலாம்' என அறிவிப்புப் பலகையை சொறுகி வைத்துவிட்டு தற்காலிகமாக கடையை சாத்தியுள்ளான்.
ஆக, எந்நேரத்திலும் வீட்டுக்குளிருந்தே தனது குறைந்தபட்ச போராட்ட பங்களிப்பை அளித்திட அவனது விரல் நுனியும், போராட்டத் திடலாக மாறிட மொபைலும், போர்க்கருவிகளை இறக்குமதி செய்திட டேட்டாவும் தெம்புணர்வுடன் தயாராகவே இருக்கின்றன. வெளியாகும் முடிவுகளுக்கு அழுகவும் கோபப்படவும் கூட அந்த ஸ்மைலீஸ்கள் வரிசையின் ஒரு மூலையில் காத்துக்கிடக்கின்றன.
‪#‎அருண்வினோ‬