Sunday, 16 October 2016

சோற்றுக்குத் திறி-ரியும் தேவதைகள்!


தேநீர் கடைகளில் தூக்கிட்டுத் தொங்கும் பன் பாக்கெட்டுக்களுக்காகவும், கொல்லி வைக்கப்பட்ட தோசைக் கல்லுக்காகவும், கண்ணாடிக் கூண்டில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பழங்களுக்காகவும், மாடிவீட்டுப் பிள்ளையால் உயிர் உறுஞ்சி் கிடாசப்பட்ட ஐஸ் குச்சிகளுக்காகவும், கொண்டியுடன் இறுதி ஊர்வலம் செல்லும் குல்பி வண்டிகளுக்காகவும், நடமாடும் நரக ரதத்தில் நெருப்பில் வெந்துகொண்டிருக்கும் கடலைக்களுக்காகவும் அவள் எப்படி ஏங்கி உறைந்திருப்பாளோ தெரியவில்லை...
உயிர்ப்பறிக்கு உள்ளான நெல்லையும், தானியங்களையும், கொலை செய்யப்பட்ட மீனையும், கோழியையும், ஆட்டையும், ரத்தத்தை பங்குபோட்டு பீய்ச்சப்பட்ட பசும்பாலையும், எப்படித்தான் இந்த பாவி மகளால் எடுத்து சாப்பிட முடியும்? குடிக்க முடியும்?
அவைகளை பார்த்து பார்த்து மனம் வெம்பி அழுகிறாள்.
நொந்து நொடிந்து துடிக்கிறாள்.
இந்த உலகம் ஏன் அவளுக்கு சடலங்களை உணவாக அளிக்க வேண்டும்?
அவள் என்ன சுடுக்காட்டு காளியா?
அல்லது
வேட்டையாடிய உயிர்களை தின்னுவதற்கு அவள்தான் தயாராக இல்லையா?
அல்லது
அவள் தின்னுவதற்கு ஏற்றதான ஒன்றை வழங்கிட இந்த உலகம் தேடிக்கொண்டிருப்பதால்தான் அவளது தட்டில் இதுவரை ஒன்றையும் காணோமா?
என்ன இவன்(நான்) உணவுகளை அமங்களப்படுத்தி எழுதியிருக்கிறானேயென்று முகம் சுளியுங்கள்...
தயவுசெய்து என்னை வைய்யுங்கள்...
என்னை கடிந்து கொள்ளுங்கள்...
நாக்கில் பல் போடுங்கள்...
ஆனால்,
அவளது கண்ணீரின் சூட்டையும் கசப்பையும் யாரிங்கறிவாரோ?
அவளது வயிற்று தம்பிரானின் காய்தலையும், வறட்சியையும் யாரிங்கறிவாரோ?
அவளது தலைமுடியும், நகங்களும் செத்துக்கொண்டிருப்பதை யாரிங்கறிவாரோ?
பசையாகிப் போன அவளது இருதயத்தின் நீரோட்டத்தையும், அதன் பிசுபிசுப்பையும் யாரிங்கறிவாரோ?
அவரெல்லாம் சேர்ந்துவந்து
சீக்கிரம் அவளுக்கு உணவை போட்டுவிடுங்கள்!
காற்றை மட்டுமே உறுஞ்சி வாழும் அவளது ஜீவனை இப்பூவுலகில் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பினை எடுத்துக்கொள்ளுங்கள்.
இதனூடே உங்கள் மதம் உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் தேடித்தரும்.
இவளை போல சோற்றுக்கு அலையும் தேவ தேவதைகளின் வயிற்றை நிரப்புங்கள்.

No comments:

Post a Comment